Friday, 27 December 2013

மனதில்..ஏறிய மரவட்டை..!!

கரம் கூப்பி...
குனிந்து வரவேற்கும் போதும்..
இதழோர சிரிப்பில் தெரியுது இகழ்ச்சி

கரம் பற்றி..
வாங்க வாங்க சொல்லும் போதும்
கை அழுத்தத்தில் தெரியுது.. வன்மம்

கடைசியாய்..பார்க்கும்
காரிய நேர கண்ணீரின் போதும்
எட்டி பார்க்கும் நிம்மதி..

அடக்கமாய் பேசி
அமட்டாமல் போகும் போதும்
அப்பட்டமாய் தெரியும் அழைப்பு

பண்பாய் பேசி
பதுவிசாய் போகும் போதும்
உண்டாக்கி போகும் விரசம்

அன்பாய் பேசி
ஆதரவை சொல்லும் போதும்
வெளி தெரியும் புகைச்சல்

காலில் விழுந்தவனை
ஆசிர்வதிக்கும் போதும்
முழுதும் மலர்ந்திடாத மனம்

தெய்வ சன்னதியில்..
தாழ் பணிந்த்திட்ட போதும்
மனம் விட்டு போகா செருக்கு

மன்றம் கூட்டி
வீரமாய் மொழிந்த போதும்
முற்றமமிடித்த துரோகம்

ஆசையாய்..அள்ளி அள்ளி
கொஞ்சல் மொழி சொல்லும் போதும்
முழுதும் நிறையா முகம்

அன்புடனே..
அன்னம் பரிமாறும் போதும்
முழுதும் பரிமாறப்படாத அன்பு

சுற்றி சுற்றி வருகிறேன்
முழுதும் மனிதம் நிரம்பிய மனிதன் தேடி

மழை பெய்த மண்னில்
இலையுது.. மரவட்டைகள்
திரிகின்ற மனிதர்களின் மனதிலும்

இதனை தேடி தேடி
கனியிருக்க காய் கவர்ந்த என்னிலும்
மனதில் ஏறிய மரவட்டை!!

No comments:

Post a Comment